Saturday, July 17, 2010

பாலஸ்தீனமும் தமிழ் ஈழமும் தொடரும் சர்வ தேசிய அலட்சியம்

இரண்டு இனவாத அரசுகளின் ராணுவங்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு இணை அரசுகளுக்கு நேர்ந்த பின்னடைவு கடந்த வாரம் உலகெங்கும் செய்தியாகின. ஒன்று இஸ்ரேல்-பாலஸ்தீனம், இன்னொன்று இலங்கை-தமிழ் ஈழம். பாலஸ்தீன காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை 400ஐத் தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறது. வான் தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதல் தொடுத்திருக்கிறது யூத இஸ்ரேல் அரசு.

பல மாதங்களின் முயற்சிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் காலி செய்துவிட்டுப் போன கிளிநொச்சியை சிங்கள இனவாத இலங்கை ராணுவம் கைப்பற்றியது. கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் சிங்கள விமானங்களின் குண்டு மழையில் எத்தனை பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. "பயங்கரவாத" அமைப்பாக கருதப்படும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் செம்பிறை (செஞ்சிலுவையின் மற்றொரு பெயர்) போன்ற நிவாரண அமைப்புகள் இருப்பதால் பாதிப்பு பற்றிய நம்பத்தகுந்த கணிப்பு உண்டு. வடக்கு இலங்கையில் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து செஞ்சிலுவை போன்ற அமைப்புக்களை இலங்கையின் சிங்கள ராணுவம் புத்திசாலித்தனமாக வெளியேற்றிவிட்டதால் அப்பாவிகள் எத்தனை பேர் செத்தாலும் கணக்கில்லை. இலங்கை-ஈழம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு வேறுபாடுகளும் உண்டு.



நாஜிக்களின் அழித்தொழிப்பை அடுத்து தங்களுக்கென சொந்தமாக ஒரு தேசம் என்ற கனவை நனவாக்குவதற்கான உடனடித் தேவையை யூதர்கள் உணர்ந்தார்கள். முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஜெருசலேமின் சுற்று வட்டாரப் பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்தது உணர்வுப்பூர்வமான முடிவு. ஆனால் "ஆளற்ற ஒரு பிரதேசத்திற்கு, நிலமற்ற யூதர்கள்" என்று அப்போது வெளியிடப்பட்ட கவர்ச்சிகரமான கோஷம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஏமாற்று வாசகம் என்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது தெரிகிறது. 1948ல் ஐ.நா சபையின் தலைமையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான அநீதி விதைக்கப்படுகிறது. யூதர்களுக்கு அந்தப் பகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்தே அராபியர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. 1919ன் கணக்குப்படி அங்கு 7 லட்சம் அராபியர்கள் இருந்தார்கள். யூதர்களின் "ஊடுருவல்" 1948க்கு நெடுங்காலம் முன்பே தொடங்கியது. 1880களிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். இன்று இஸ்ரேலின் உளவுப் படை மொஸாத் செய்வது போன்ற அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடந்தது. பணமும் பலவந்தமும் கொண்டு மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரேயடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அடால்ப் ஹிட்லரின் யூத அழித்தொழிப்பு வெறித்தனம்.

நாஜிக்களின் அழித்தொழிப்பால் உலகமே யூதர்களின் மீது பரிதாபம் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனத்தில் யூதர்கள் செய்த ஆரம்ப கால அநீதிகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. அராபியர்களிடமிருந்து நிலங்கள் காசு கொடுத்து வாங்க முயற்சி நடந்தது. அந்த நிலங்களை மீண்டும் ஒரு அராபியருக்கு விற்க முடியாது என்ற விதியின்கீழ் நில வர்த்தகங்கள் நடந்தன. அராபியர்களின் தேசத்தை கபளீகரம் செய்யும் முயற்சி இது என்று விரைவில் உணர்ந்துகொண்ட அராபியர்களை நேர் வழியில் விரட்ட முடியாமல் போனதால், பிரிட்டன் ராணுவத்தின் உதவியுடன் பலவந்தமாக அராபியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்தார்கள். கடந்த நூற்றாண்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் அழித்தொழிப்பின் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த யூதர்கள், மறு நொடியில் அராபிய இனக்குழுக்களை ரகசியமான வழிகளில் அழித்தொழிக்கும், விரட்டியடிக்கும் புதிய நாஜிக்களாக மாறினார்கள். அகதிகளாக, நாடற்றவர்களாக விரட்டப்பட்ட அராபியர்கள் தங்களுக்கென ஒதுக்கிக்கொண்ட சிறிய பகுதியில்கூட முழு சுதந்திரத்துடன், தன்மானத்துடன் வாழ அனுமதிக்கக்கூடாது என்ற இஸ்ரேலின் வன்முறை மனோபாவம்தான் ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவைப் பெருக்குகிறது. இரண்டு சமூகங்களும் ஒரு தேசமாக இணைந்திருப்பதை எதிர்க்கும் இஸ்ரேல், தனது நாட்டில் சிறுபான்மையினராகக்கூட அராபியர்கள் இருப்பதை அனுமதிப்பதில்லை. "தென்னாப்ரிக்காவின் நிறவெறி (அபார்தீட்) கொள்கையைப் போன்றதுதான் இஸ்ரேலின் பாலஸ்தீனிய கொள்கை. அதனால் நிறவெறிக்கெதிராக உலக நாடுகள் எவ்வாறு கடுமையாக நடந்துகொண்டதோ அதே போல இஸ்ரேலிடமும் நடந்துகொள்ள வேண்டும்" என்கிறார் ஐ.நா பொது சபையின் தலைவர் மிகேல் டி-எஸ்காட்டோ புராக்மேன்.

புராக்மேன் இஸ்ரேலை வெறுப்பவர், அதனால்தான் இவ்வாறு சொல்கிறார் என்ற வாதத்தை முன்வைக்கிறது இஸ்ரேல். எனினும் ஜூவ்ஸ் பார் ஜஸ்டிஸ் இன் த மிடில் ஈஸ்ட் என்ற யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரால் நடத்தப்படும் இயக்கம் இஸ்ரேலின் பல பொய்களை அம்பலமாக்கி வருகிறது. மண்ணின் மைந்தர்களுக்கு தங்கள் வாழ்விடம் குறித்த எந்த உரிமையும் இல்லை என்ற காலனியாதிக்க மனோபாவத்துடன் அராபியர்களை விரட்டியடித்ததுதான் இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. எவ்வாறு யூதர்கள் மிகவும் திட்டமிட்டு அங்கிருந்து அராபியர்களை விரட்டிவிட்டு, அதை ஒரு யூத தேசமாக்கினார்கள் என்பதை அந்த அமைப்பு முழுமையான பதிவு செய்திருக்கிறது. இவ்வளவு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன அராபியர்கள் வாழ வழியே இல்லை என்பதால்தான் நோம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்கள்கூட யூதர்களுக்கும் பாலஸ்தீன அராபியர்களுக்கும் தனித் தனி தேசங்களை கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். இந்த சமரசத் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், லெபனான், சிரியா, ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடுவில் ஒண்டிக்கொண்டு வாழும்படி உருவாக்கப்பட்ட தேசம் பாலஸ்தீனர்கள் உண்மையில் விரும்பிய தேசம்தானா என்று தெரியவில்லை. இல்லையென்றால் இவ்வளவு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகு யாசர் அராபத்தின் கட்சி சரிவைச் சந்தித்திருக்காது.

வரலாற்றுரீதியாக பாலஸ்தீனர்களுக்கு உள்ள வாழ்வுரிமையை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய யாசிர் அராபத் பெரும் பங்காற்றினார். தான் தலைவராக வேண்டும் என்பதற்காக யூதர்களுக்குத் தனி தேசம், அராபியர்களுக்குத் தனி தேசம் என்ற சமரசத்தையே முன்வைத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுவது உண்டு. எனினும் யூத-அராபிய தரப்பில் நிலவிய மிகுந்த மனக் கசப்பால் அவர்கள் ஒரு தேசத்தின்கீழ் வாழ்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்பது ஏற்கக்கூடிய வாதம்தான். ஆனால் யாசர் அராபத்தின் சமாதான முயற்சிகளுக்கு நடுவே ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வந்தது. யாசர் அராபத்தின் மரணத்திற்குப் பிறகு அவரது கட்சி இன்னும் பலவீனமானது. அவருடைய கட்சியுடனும் இஸ்ரேலும் அதன் காட் பாதரான அமெரிக்காவும் கைகுலுக்கத் தொடங்கியது பாலஸ்தீனியர்களிடையே எதிர்மறை எண்ணத்தை விதைத்திருக்க வேண்டும். அரபு நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை நிறுவும் அமெரிக்கக் கனவு மீண்டும் பலித்துவிட்டது போல் தெரிந்த சமயத்தில் பாலஸ்தீனத்தில் அரசியல் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது. அரை நூற்றாண்டு காலமாக பாலஸ்தீனியர்கள் மனதில் விதைக்கப்பட்ட வெறுப்பு ஹமாஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தின் வடிவில் வளர்ந்து நின்றது. 2006 நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் பெரு ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதுவரை தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்திய அமைப்பு சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றதை இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. புதிய பாலஸ்தீன அரசுக்கு கொடுத்து வந்த அத்தனை நிதியுதவியையும் நிறுத்தினார்கள். ஒரு தேசத்திற்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்த பாலஸ்தீனத்திற்கு அது பேரிடி. வெளிநாட்டு உதவி இல்லாவிட்டால் அரசு ஊழியர்கலின் சம்பளத்தைக்கூட போட முடியாத நிலை. ஹமாஸை பலவீனப்படுத்துவதற்கா தேர்தலில் தோற்ற பிரதமர் மஹ்மூத்தின் பதா கட்சியின் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அணிவகுத்தன. ஹமாஸ்-பதா இடையே குட்டி போர் வெடித்தது. அமெரிக்கா செய்த அரசியலால் இன்று பாலஸ்தீனம் ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காசா, பதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்படுத்தும் வெஸ்ட் பேங்க் என தனித் தனி பிரதேசங்களாக பிளவுபட்டிருக்கிறது.

இடையிடையே பயங்கரவாதி என்று வர்ணித்த ஹமாஸுடன் தற்காலிக அமைதி ஒப்பந்தங்களை செய்துகொள்ளத் தயங்காத இஸ்ரேல், அந்த ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசியில் கையெழுத்தான ஒப்பந்தத்திபடி பாலஸ்தீனுக்குள் வரும் பொருட்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் ஒன்று பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதே இல்லை அல்லது மிகக் குறைவான அளவிலான பொருட்களையே அனுமதித்து வருகிறது. இதனால் மருந்து, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை பாலஸ்தீனத்தை ஒரு குட்டி சோமாலியா போல மாற்ற அச்சுறுத்துகிறது. இந்த நிலையில்தான் இந்த டிசம்பரில் முடிவுக்கு வரும் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாததைக் கண்டித்து கடந்த நான்கு வாரங்களில் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை அதிகரித்தது ஹமாஸ். அதையே ஒரு காரணமாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீனை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். அத்தியாவசியப் பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்று இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன.

தேசங்களின் இறையாண்மையைவிட தங்களின் நோக்கங்களே பெரிது என்று கருதும் இஸ்ரேல் மற்ற பல நாடுகளின் எல்லையில் ரகசிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. இன்னும் முழுமையான தேசமாக உருவெடுக்காத பாலஸ்தீனத்தினத்திற்குள் அப்படி எக்கச்சக்கமான "ஆபரேஷன்கள்" நடத்தப்பட்டுள்ளன. தனக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதும் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். அவர்களில் சிலர் நிரந்தரமாக காணாமல் போவார்கள். அப்படி சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதிகளை கடத்திச் சென்றதுதான் ஹமாஸ் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தக் காரணம் என்கிறார் நோம் சாம்ஸ்கி. இஸ்ரேல் சிவிலியன்களை பிடித்துச் செல்வதை பிரச்சனையாக்காத உலக நாடுகள், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி மிகுந்த அக்கறை காட்டுவதில் உள்ள அரசியலை கண்டிக்கிறார் சாம்ஸ்கி.

பாலஸ்தீனுக்கு உதவ வேண்டிய சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் ஆளுக்கொரு அரசியல் காரணங்களால் ஒதுங்கி நிற்பது அதைவிட பெரிய வேடிக்கை. எகிப்தின் எல்லையில் உள்ள பாலஸ்தீன எல்லைகூட அத்தியாவசியப் பொருட்களுக்காக திறந்துவிடப்படவில்லை. எவ்வாறு இலங்கையில் புலிகள் நலனையும் தமிழர்கள் நலன்களையும் பிரித்துப் பார்க்க மறுக்கிறார்களோ அதே போல பாலஸ்தீனத்தில் ஹமாஸின் நலனையும் அராபியர்களின் நலனையும் பிரித்துப் பார்க்க அராபிய தேசங்கள் மறுக்கின்றன. தங்களின் ஜனநாயகமற்ற அரசுகளுக்கும் ஹமாஸின் எழுச்சி அச்சுறுத்தலாக மாறும் என்று அராபிய தேசங்கள் அஞ்சுகின்றன. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா இந்த விஷயத்தில் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருப்பது தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பயத்தால்தான்.

யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற பெயரில் ஒரு தேசமாக வாழும் உரிமையையே மறுக்கும் அளவுக்கு தீவிரமான கொள்கை கொண்ட ஹமாஸ் ஒரு சகிப்புத்தன்மைமிக்க சக்தி அல்ல என்பது உண்மைதான். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தலைவர்கள்கூட ஜனநாயக சக்திகள் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிப்ரவரியில் நடக்கவிருக்கும் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்காமலிருப்பதற்காகத்தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எஹுத் பராக் பாலஸ்தீனுக்குள் தனது படைகளை ஏவியுள்ளார். முன்னாள் பிரதமர் பின்யாமின் நெதன்யாகூதான் ஜெயிப்பார் என்ற கணிப்புகளை சிதறடிக்க அவருக்கு இந்த வாய்ப்பு உதவியிருக்கிறது என்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் முழு ஆதரவாளராக இருக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இந்த மாத இறுதியில் பதவியிறங்கும் முன்பு இந்தத் தாக்குதலை நடத்தியாக வேண்டும் என்று அவசர அவசரமாக இதைச் செய்துள்ளார்கள். ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் அவர்களுக்கு ஜெயிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

சொந்தமாகத் தயாரித்த அரைகுறை ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவியது ஒரு வகை கவன ஈர்ப்புதான். தங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொருளாதார, வாழ்வாதார முற்றுகையை உடைக்க உலக நாடுகளின் கவனத்தை மத்திய கிழக்கை மூலம் திருப்ப வேண்டியிருந்தது. ஹமாஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியிருந்தாலும் அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆனால் இஸ்ரேலின் ஒரு வார வான் தாக்குதலில் 400க்கு மேற்பட்ட பாலஸ்தீன பெண்கள், குழந்தை, போலீஸ்காரர்கள் இறந்திருக்கிறார்கள்.

யூதாயிசம், இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகின் மூன்று பழம்பெரும் மதங்களின் பிறப்பிடம் ஜெருசலேம். மதங்களின் பிறப்பிடம் இன்று, மதங்களுக்கிடையிலான மோதலுக்கான ஊற்றுக்கண்களாக மாறியிருக்கிறது. தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து, தங்களையே அகதிகளாக விரட்டிய இஸ்ரேலுக்கும் அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்காவுக்கும் எதிரான உலக முஸ்லிம்களின் கோபத்தை கிறிஸ்தவ, யூத மதங்களின் மீதான கோபமாக அடிப்படைவாதிகள் திருப்புகிறார்கள். யூதர்களோடும் அமெரிக்காவோடும் தொடர்புடைய இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் அதன் பின்விளைவுகளை சந்திக்கின்றன. வெறுப்பு விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் அடிப்படைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேட்டைக் களமாக மாறுகின்றன. இதில் அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலிய யூதர்களும் இலங்கையின் சிங்களர்களும் வெறுப்பை விதைக்காமலிருந்திருந்தால் ஒரு ஹமாஸ் உருவாகியிருந்திருக்காது ஒரு எல்.டி.டி.இ உருவாகியிருந்திருக்காது.

அரசின் அரியணையில் அமர்ந்திருக்கும் பெளத்த மதம். அனைத்திலும் பெரும்பான்மை இனத்திற்கே முன்னுரிமை தரும் சிங்கள தேசக் கனவு. அதே மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் உரிய இடத்தினை மறுப்பது. இஸ்ரேலும் இலங்கையும் ஒடுக்குமுறை வரலாற்றில் பெரும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீனத்தில் வெறுப்பு விதைக்கப்பட்ட அதே 1948ல் இலங்கையில் வெறுப்புக்கு பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் கொடுத்தது. சிங்கள ஆட்சி மொழி, அரசு உயர் பதவிகளை சிங்களரே வகிக்க முடியும் என்பது போன்ற அம்சங்கள் இலங்கையின் சக மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு சவால் விட்டன. தமிழர்களின் கவலையால் எழுந்த குரல்களை சகித்துக்கொள்ளும் அளவுக்கு பரந்த உள்ளம் கொண்டதாக சிங்கள தேசியம் இருக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு மன்னர்கள் இலங்கையின் மீது போர் தொடுத்து வென்ற பழங்கால வரலாற்றின் பயங்களை இன்றும் கொண்டிருக்கிறார்கள் சிங்கள பெரும்பான்மையினர். இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்கள் இந்தியாவின் தமிழர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சிங்கள தேசத்தைக் கைப்பற்றுவார்கள் என்று சிங்கள இனவாதக் கட்சிகள் சிங்களப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டார்கள். அந்த பயத்தால் உருவான ஆதரவைக் கொண்டு அன்று முதல் இன்று வரை இன அழித்தொழிப்பை சோர்ந்து போகாமல் நிறைவேற்றி வருகிறார்கள் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் அழித்தொழிப்பை நிகழ்த்தி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத பாணி இயக்கங்களுக்கு வித்திட்டது இலங்கை இனவாத தேசியம். காலப் போக்கில் ஆயுத வழிகளைக் கைவிட்ட அமைப்புகள் யாசர் அராபத்தின் கட்சியைப் போலவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டன. சிங்கள அரசுடன் சமரசம் செய்துகொண்டு தங்களுக்கு பதவிகள் பெற்றுக்கொள்ளும் பட்டியலில் முன்னாள் புலித் தலைவர் கருணா வரை நிறைய பேர் சேர்ந்துவிட்டார்கள். 21 ஆண்டுகளாக இருக்கும் ஹமாஸ் இப்போது தேர்தலில் பெரும்பான்மையுடன் வென்றுவிட்டது. 33 ஆண்டுகளாக இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு முழு மக்கள் ஆதரவு உள்ளதா என கண்டறிய முழு சுதந்திரத்துடன் நடத்தப்படும் தேர்தல்கள் ஏதும் வட இலங்கையில் இதுவரை இல்லை. ஆனால் வட இலங்கையின் தமிழர்கள் புலிகளைத்தான் தங்கள் காப்பாளர்களாகக் கருதுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சிங்கள ராணுவம் கைப்பற்றிய பிறகு தாங்கள் எவ்வாறு நடத்தப்படுவோம் என்ற தமிழர்களின் பயம் நியாயமானதே.
தனது கைப்பாவையாக மாறிவிட்ட கருணாவிடம் கிழக்குப் பகுதிகளில் குத்தகை விட்டிருக்கும் சிங்கள அரசு, வடக்கிலும் அதே போன்ற "ஜனநாயகத்தை" அமல்படுத்தப் போவதாகக் கூறுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்டதால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை வைத்து ஒரு கோமாளி அரசை திணித்துவிட்டு ஜனநாயம் மலர்ந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவிக்கும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல மெல்ல மெல்ல தமிழ்ப் பகுதிகளில் சிங்களர்களை புகுத்துவது அவர்களின் அரசியல் திட்டங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் யூதப் படைகள் நீண்டகாலம் அங்கிருக்க முடிவதில்லை. அதேபோல கிளிநொச்சி போன்ற பகுதிகளில் சிங்கள ராணுவம் எவ்வளவு காலம் இருக்க முடியும் என தெரியவில்லை. 1996ல் இதே போல கைப்பற்றிய கிளிநொச்சியிலிருந்து சிங்கள ராணுவம் 1998ல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்ததை மறக்க முடியாது. கெரில்லா போர் முறையில் பின்வாங்குவதும் அடர்ந்த வனங்களுக்கு தப்பியோடுவதும் எதிரி பலமாகும் போது மேற்கொள்ளப்படும் அடிப்படை வியூகம். அதை வைத்து கெரில்லா இயக்கம் தோற்றுவிட்டதாகக் கூற முடியாது. மாறாக இனவாத பெரும்பான்மையினர் எந்த அளவிற்கு சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை பிறக்கிறது என்பதே மாற்றத்தைக் கொண்டு வரும். சிங்கள ராணுவத் தளபதி பொன்சேகா, அதிபர் ராஜபக்ஷே போன்றவர்களின் இன துவேஷக் கருத்துக்களைப் பார்க்கும் போது மாற்றம் கண்ணில் படவில்லை.

இஸ்ரேலைப் போலவே இலங்கையிலும் அரசியல் கணக்குகள்தான் தமிழர்களுக்கெதிராக கடுமையாக நிலையெடுக்கக் காரணம். தீவிர தேசியவாதத்தைத் தூண்டிவிடுவது மூலம் தனக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் ராஜபக்ஷே. ஜனநாயக அரசுகள் எல்லாம் நல்லவை, ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எல்லாம் கெட்டவை என்ற பார்வை எவ்வளவு முட்டாள்தனமானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன சிங்கள அரசும் இலங்கை அரசும். இன்று அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை போன்றவை ஜனநாயக அரசுகள் ஆளும் நாடுகள். ஆனால் சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையற்ற அரசுகளான இவை ஜனநாயகம் என்ற பெயரில் தங்களது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் இந்த பயங்கரவாத அரசுகளைவிட, பயங்கரவாதத்தை வெளிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் எவ்வளவோ மேல். ஹமாஸ் மீதும் புலிகள் மீதும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தடை விதிக்க முடியும். அமெரிக்க, இஸ்ரேல், இலங்கை மீது தடை விதிக்க முடியாது. உலகின் மிகவும் அஞ்சப்படும் ராணுவத்தைக் கொண்டிருக்கும் அமெரிக்காவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சனை வருவதை அமெரிக்கா அனுமதித்ததே இல்லை. இலங்கைக்கு பிரச்சனைகள் வருவதை இந்திய அரசும் சமீப காலமாக அனுமதிப்பதில்லை.

பாலஸ்தீனத்திற்கு அதனைச் சுற்றியிருக்கும் அரபு நாடுகள் சமீப காலங்களாக செய்து வரும் துரோகத்தையே இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்கிறது. ஹமாஸின் எழுச்சியை தங்களுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கும் அரபு நாடுகள் போல, புலிகளின் எழுச்சியை தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. ஆனால் பாலஸ்தீனத்தைவிட தமிழ் ஈழத்தின் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது. இலங்கையும் ஈழமும் தனித் தனி தேசமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போல இன்னமும் தெளிவாகவில்லை என்றாலும் மனம் திருந்தாத சிங்கள இனவாத அரசின்கீழ் தமிழர்கள் முழு சுதந்திரத்துடன் வாழ முடியுமா எனத் தெரியவில்லை. பாலஸ்தீன விவகாரங்களில் உலகின் கவனத்தை ஈர்க்க முடிகிறது. ஆனால் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு சிங்கள விமானப் படை நடத்தும் குண்டு வீச்சில் அப்பாவிகள் இறக்கிறார்களா என்று பார்ப்பதில்கூட உலக நாடுகளின் கவனம் திரும்பவில்லை. இந்தியாவே அதைக் கண்டுகொள்ளாத போது உலக நாடுகளைக் குறை சொல்லி பிரயோஜனமில்லை. இஸ்ரேலின் காட் பாதராக தன்னை பாவித்துக்கொள்ளும் அமெரிக்காவும் "பயங்கரவாத ஹமாஸ் இயக்கமே சமீபத்திய மோதல்களை ஆரம்பித்து வைத்தது" என்று தீர்ப்பு கூறிவிட்டது. உலக ஊடகங்கள் இந்த வாதங்களையே பிரதியெடுக்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் சிங்கள அரசுக்குச் சாதகமான பார்வையே பெருவாரியான ஊடகங்கள் முன்வைக்கின்றன. கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றியதை வட இந்திய ஊடகங்கள் கொண்டாட்டமாக அறிவிக்கின்றன. வட இந்தியர்களுக்கு இந்தியாவின் தமிழர்கள் மீதே பெரிய மரியாதை இல்லாத போது இலங்கைத் தமிழர்கள் மீது அவர்களுக்கு கரிசனம் இருக்குமா? இன்று, இஸ்ரேலுக்கு அமெரிக்கா போல இலங்கையின் சிங்கள அரசிற்கு வட இந்திய அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசு காட் பாதராக மாறிவிட்டது. தமிழக கூட்டணி அரசை நம்பியிருப்பதால்தான் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஒளிந்து மறைந்து உதவிகள் செய்கிறது, இலங்கையை கண்டிப்பது போல நடிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போயிருந்தால் சிங்கள ஆதரவு, இலங்கைத் தமிழர் எதிர்ப்பு இந்திய அரசியல் சாஸனத்திலேயே புகுத்தப்பட்டிருக்கும்.

துன்புறுத்தும் இஸ்ரேலுக்கு பதில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீன் ஒதுக்குதலுக்கு ஆளாகிறது. தமிழ் ஈழத்தின் நிலையும் மாறுபட்டதல்ல. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே காரணத்திற்காக அப்பாவிப் பொது மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முடக்கி வருகிறது சிங்கள அரசு. அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை நிறுத்தி அல்லது தேவையைவிட குறைவான வினியோகத்தையே அனுமதிக்கும் இஸ்ரேலின் கொள்கை உலக நாடுகளுக்கு ஒரு பொருட்டல்ல. தனி தேசமாகி வரும் பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ரகசியமாக புகுந்து அந்த நாட்டு குடிமக்களை கடத்துவது உலக நாடுகளுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. ஹமாஸ் ராக்கெட் ஏவுவது மட்டும்தான் பிரச்சனை. அதே போல இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது இடம் பொருள் பாராமல் விமானத் தாக்குதல் நடத்துவதோ, அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தைத் தடுப்பதோ, செஞ்சிலுவை போன்ற நிவாரண அமைப்புக்களை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விரட்டுவதோ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் ஹமாஸ் மற்றும் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள் மட்டும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய பிரச்சனைகள். அத்தியாவசிய பொருட்கள் என்ற பெயரில் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் சொல்கிறது, நிவாரணப் பணிகள் என்ற பெயரில் சர்வதேச மரியாதையைப் பெற்ற செஞ்சிலுவை போன்ற அமைப்புக்கள் புலிகளுக்கு உதவுவதாக இலங்கை சொல்கிறது. அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொல்கிறது. புலிகளோ ராணுவ இலக்குகள், ராணுவ-அரசியல் தலைவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் யார் பயங்கரவாதிகள்?

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்கள் தீவிரம் அடைவதாகக் கூறப்படும் இன்றைய அரசியல் சூழலில் ஐ.நாவும் உலக நாடுகளும் சிறுபான்மை நலன்களைப் பாதுகாப்பதில் புதிய நிலைபாடு எடுத்திருக்கின்றன. பாலஸ்தீனத்திலும் ஈழத்திலும் சிறுபான்மையினர் அத்தனை பேரும் இல்லாமலாக்கப்பட்ட பிறகு, பயங்கரவாதம் ஒழிந்தது ஜனநாயகம் வென்றது என்று உலகமே கூத்தாட வேண்டும். அந்த பொன்னாள் மலர்வதைத் தடுக்கும் பாலஸ்தீன ராக்கெட் ஏவுதல்களும் புலிகளின் ராணுவ-அரசியல் நிலைகள் மீதான தாக்குதல்களும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். சிறுபான்மையினரின் கழுத்தை நெரிக்கும் விஷயத்தில் ராக்கெட்டுகளும் செஞ்சிலுவைகளும் தடையாக இருப்பதை அரச பயங்கரவாதத்தால் ஜீரணித்துக்கொள்ள முடியாததை புரிந்துகொள்ள முடிகிறது.

உணர்ந்தார்கள்.

Friday, June 11, 2010

{நாம் தமிழர் பேரியக்கம்} நம்பிக் கெடுவதே நம் பழக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே, இந்திய அரசும்- இலங்கையும் இலங்கைத் தமிழர் தொடர்பாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் வெறும் கண்துடைப்பு என்பதை ஊகிப்பதும் மிக எளிது.

மூன்று மாதங்களுக்குள் தமிழர்கள் அவர்தம் வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் ராஜபட்ச கூறியதாகக் கூறப்படும் செய்திகளும்கூட, இந்திய மண்ணில் நின்றுகொண்டிருப்பதால் சொல்லப்படும் வெறும் வார்த்தைகள் என்பதைத் தவிர, அதில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படவில்லை.

மொத்தம் ஏழு ஒப்பந்தங்களில் இந்தியாவும் - இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இதில் ஓர் ஒப்பந்தம், இலங்கையில் உள்நாட்டுப்போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை மீண்டும் அவர்களது மண்ணில் குடியேறச் செய்வதும் குறித்தானது. இந்த ஒப்பந்தம் செய்யாவிட்டால், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும், கடும் விமர்சனங்கள் எழும் என்கிற ஒரே காரணத்தால்தான், சர்க்கரை நோயாளியின் சாப்பாட்டு இலையில் வைத்த லட்டு போல இந்த ஒப்பந்தமும் இடம் பெற்றதே தவிர, இதை இலங்கை நிறைவேற்றப் போகிறது என்ற நம்பிக்கை இந்திய அரசுக்கு இருப்பதாகவோ அல்லது இதை நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதாக இலங்கை அரசு நம்புவதாகவோ சொல்வதற்கில்லை.

ராஜபட்ச வருகை இரு நாடுகளுக்கான வர்த்தக உறவை மேம்படுத்துவதும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உதவியைப் பெறுவதும், இலங்கையில் சில சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதும்தான். இலங்கையில் இந்தியா உதவியுடன் 500 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைவதும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் அமைவதும்கூட இருக்கிறது. இவையெல்லாம் அமல்படுத்தப்படும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை.

இத்தகைய நாடகங்களுக்கு இந்தியாவும் ஏன் ஒரு பாத்திரமாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்யும் முன்பாக, தமிழர்களும் தமிழக அரசும் இதில் எத்தகைய அக்கறையைக் காட்டினர் என்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜபட்ச வருகையைக் கண்டித்து பழ. நெடுமாறன் (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்) சீமான் (நாம் தமிழர் இயக்கம்) ஆகியோர் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்குத் தமிழ்நாட்டில் பெருந்திரளான வரவேற்பு இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன என்பதைக் கண்ணுறும் தமிழக அரசும், மத்திய அரசும் இதில் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளும்?

பல மாதங்களுக்கு முன்பு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்று ராஜபட்சவையும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களையும் நேரில் பார்த்துவிட்டுத் திரும்பியது. இக்குழுவிடமும் ராஜபட்ச இப்போது சொல்லும் இதே உறுதிமொழிகளைக் கூறினார். ஆனால், இலங்கையில் எந்தவித நன்மையும் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வாழ வழியில்லை. இன்னமும் 70,000 பேர் முகாம்களில் உள்ளனர். இதுபற்றி யாரும் மீண்டும் ராஜபட்சவைக் கேட்கவில்லை. ஒரு கடிதம் போட்டதாகவும் செய்தி இல்லை.

இப்போது, இந்தியாவுக்கு ராஜபட்ச வந்த நாளன்று, தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "ராஜபட்ச சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை, தமிழர்களுக்கு மறுவாழ்வு தரும் பணிகளை விரைந்து முடிப்பேன் என்றார். ஆனால் அதைச் சொன்னபடி செய்யவில்லை' என்று கூறியுள்ளார். ஊடகங்களுக்கும்கூட, ராஜபட்ச இந்தியா வரும்போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்னை நினைவுக்கு வருகிறது. தமிழக முதல்வரும்கூட, ராஜபட்ச இந்தியா வரும் நேரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகளின் அதே அக்கறை தனக்கும் இருப்பதாக வெளிப்படுத்துகிறார்.

ராஜபட்ச இலங்கையில் விமானம் ஏறிய அதே நாளில், இலங்கைப் பிரதமர் ஜெயரத்னே சொல்கிறார்: "இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையெடுக்கப் பார்க்கிறார்கள். இதுவரை 77 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று புள்ளிவிவரம் தருகிறார். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகள் வீழ்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இலங்கையில் இதுநாள்வரை ஒரு குண்டுவெடிப்புகூட நடக்காத நிலையில், இத்தகைய வாதத்தை முன்வைப்பது எதற்காக? இன்னமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மக்களோடு மக்களாக இருக்கிறார்கள் என்கிற வாதத்தை நிலைநிறுத்தி, தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களில் குடியமர்த்துவதை மேலும் காலதாமதப்படுத்தவும், தங்கள் செய்கையை நியாயப்படுத்தவுமான முயற்சிகளேயன்றி வேறென்ன?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தம் எந்தெந்த நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும், அதைச் செயல்படுத்துவதில் தமிழர்களின் பங்கு மற்றும் மேற்பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடும் நிலையில் திமுக இருக்கிறது. இதுநாள்வரை அளித்த நிதி மற்றும் மருத்துவ உதவிகளை ஏன் தமிழர்களிடம் வழங்கவில்லை என்று ராஜபட்சவிடம் இந்திய அரசு கேள்வி கேட்கச் செய்யும் வலிமை திமுகவிடம் இருக்கிறது. ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியே, "ராஜபட்ச சொன்ன சொல் தவறிவிட்டார் என்றும், இந்திய அரசும் தமிழக அரசும் அளித்த நிதியுதவிகூட மக்களைச் சென்று சேரவில்லை' என்றும் பேட்டி அளித்துக்கொண்டிருந்தால்... ராஜபட்சவுக்கு தமிழர்கள் மீது என்ன மதிப்பு உண்டாகும், எப்படி இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முற்படுவார்...?

Wednesday, June 9, 2010

போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது ஆனால்..

தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "நாட்டில் யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த சந்தர்ப்பம் இப்போது வாய்த்துள்ளது.

ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் அரசு அந்த சந்தப்பத்தை பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.
அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அரசு முனைப்பு காட்டுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடித்து அவர்களுக்குரிய பணியை நிறைவேற்றி விட்டனர். இனி அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. நாமே அதை நிறைவேற்ற வேண்டும். இந்த நிலையில் ராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதியை தூக்கிலிடப் போவதாக பாதுகாப்பு செயலாளர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.

தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீண்டகால சமாதானத்திற்கு மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது அவசியம் ஆனால், இன்று வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குடும்ப ஆட்சியை கட்டியெழுப்பவே முயற்சிக்கின்றனர். அரசியல் தீர்வு பற்றி அக்கறைப்படாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

எனினும் அரசாங்கமோ தமிழ் மக்களின் விருப்பங்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாய்ச்சுவதையே குறியாகக் கொண்டுள்ளனர். நாடு மீண்டும் பழைய அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தால் நாட்டை பிளவுப்படுத்துவதற்காக மீண்டுமொரு போராட்டம் ஆரம்பமாகக் கூடும்.

எனினும் அந்த போராட்டமானது வன்னிக்காட்டில் ஆரம்பிக்காது. நியூயார்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும். போராட்டத்தில் ஆயுதங்களின்றி தொழில்நுட்பமே பயன்படுத்தப்படும். போராளிகள் சயனைட் குப்பிகளை கழுத்தில் தொங்கவிட்டவர்களாக இல்லாமல் நன்கு கல்வியறிவுடைய புலம்பெயர் வாழ் மக்களாக இருப்பார்கள். அதை இந்த அரசால் தாக்குப்பிடிக்க முடியாது.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பேதங்களற்ற உணர்வு தேவை. அது அரசியல் தீர்வின் மூலமாகவே சாத்தியமாகும்...," என்றார்.

Tuesday, June 8, 2010

Jeevanea - Hope For Peace - By Vashanth Sellathurai & Kannan

இலங்கை இந்திய அரசுகளின் முதற்தோல்வி எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?



இலங்கையில் ஜுன் 3 முதல் 5 வரை நடைபெற்ற ஒஸ்காருக்கு நிகரான 11வது சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அதன் தூதுவரும் பிரபலமான நடிகருமான அமிதாப்பச்சன் கலந்து கொள்ளாதது "மணமகன் இல்லாத திருமணத்தைப் போல அதனை ஆக்கி விட்டுள்ளது" என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான றோஸி சேனநாயக்கா வர்ணித்திருக்கிறார்.


தாங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளாமைக்கான வேறுவேறு காரணங்களைப் கூறி பொலிவூட்டின் பிரலமான சுப்பர் ஸ்டார்கள் அனைவரும் இந்த விழாவைப் பகிஸ்கரித்து விட்டிருக்கின்றனர்.


இதன்காரணமாக உலகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற விழாக்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் அதேவேளையில் களையிழந்த ஒரு விழாவாகவும் இது மாறி இருக்கிறது.


ஆரம்பத்தில் இந்த விழாவை இலங்கையில் நடத்துவது என்ற முடிவில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிக்கு இந்தியா பிரதான பங்காற்றியிருந்தது. இந்த விழாவை நடாத்துவதனூடாக ஐந்து பிரதான இலக்குகளை அடைய இலங்கை திட்டமிட்டிருந்தது.


முதலாவது சர்வதேச ரீதியாக உள்ள இலங்கை மீதான அபகீர்த்தியை இல்லாதொழித்து நற்பெயரை நிலைநாட்டுவது.


இரண்டாவது, கடந்த 3 வருட காலப் போரினால் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டி எழுப்புவது.


மூன்றாவது, அரசாங்கத்திற்கெதிராக எழுந்து வருகின்ற தெற்கின் எதிர்ப்பலைகளை இவ்வகையான விழாக்கள் மற்றும் களியாட்டங்கள் மூலமாக நீர்த்துப் போகச் செய்வது.


நான்காவது இவ்விழாவில் பெருமளவு தமிழ் சுப்பர்ஸ்டார்களும் தமிழ் நடிக நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் பால் கொண்ட ஈர்ப்பின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கெதிராக எதிர்ப்புணர்வு தணிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு.


ஐந்தாவதும் மிக முக்கியமானதும் இந்திய முதலீட்டாளர்களையும் முதலீடுகளையும் கவர்ந்து இழுப்பது.


இலங்கையின் இத்திட்டப்படி இந்தியாவின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு ஆரம்பத்தில் இலங்கைக்குச் சாதகமானதாகவே இருந்தது. அமிதாப்பச்சன் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியுடன் விருந்துண்டார்.


இந்திய அரசாங்கம் வடஇந்திய நடிகர்களை விழாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு தென்னிந்தியாவில் கை வைத்த போது தான் வந்தது வில்லங்கம்.


இலங்கை அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஓராண்டு நிறைவுக்குள் இப்படி ஒரு விழாவா, இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுவாசல்களைவிட்டு அகதியாக அலைகையில் இப்படி ஒரு கொண்டாட்டமா? சர்வதேசமே இலங்கை அரசு மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இலங்கை அரசாங்கத்துடன் நாம் கூடிக் குலாவுவதா, அந்த விழாவில் நாம் கலந்து கொள்வதா என்று தென்னிந்திய சினிமாத்துறையுள் ஆரம்பித்த முணுமுணுப்பு மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.


தென் இந்திய வர்த்தக சினிமா சங்கம், தென்னிந்திய சினிமாத்துறை ஊழியர் சமாஜம், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியன தமிழ் திரைத்துறையினர் இந்த விihவில் பங்கேற்கக் கூடாது என்று குரலெழுப்பினர்.


தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல கேரளாவிலிருந்தும் எந்த ஒரு நடிகரும் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாயிற்று. மொத்தமாகத் தென்னிந்தியாவே இந்த விழாவைப் பகிஸ்கரித்தது.


ஆனால் அதைவிட இவ்விழாவுக்குப் பேரிடியாக அமைந்தது சர்வதேச இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தூதுவரும் பிரதான நடிகருமான அமிதாப்பச்சன் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தது தான். ஆரம்பத்தில் இலங்கை வந்து இவ்விழாவை சிறப்புற நடாத்த உறுதியளித்த அவர் பின்னர் தான் இவ்விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தார்.


இந்திய அரசின் நெருக்குதல் காரணமாக தான் கலந்து கொள்ளாத காரணத்தை நேரடியாகத் தெரிவிக்காத அவர் தனது வலைப்பக்கத்திலும் ருவிற்றரிலும் குஜராத்தின் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கான ஒரு படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமலிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.


அவருடைய மகனான அபிஸேக் பச்சனும் மருமகளான ஐஸ்வர்யா ராயும் கூட இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.


பிரபல திரைப்பட நெறியாளரான மணிரத்னத்தின் புதிய திரைப்படமான இராவணா இந்த விழாவில் திரையிடப்பட இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல. தனது திரைப்படத்தை திரையிடவும் அவர் மறுத்திருக்கிறார். காரணமாக அதன் தயாரிப்பு வேலைகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.


ஹிந்தியின் பிரபல்யமான இன்னொரு நடிகரான ஸாருக்கானோ தனது ருவிற்றரில் தனது வேலைப்பளு காரணமாக கொழும்பு விழாவில் பங்கேற்ற முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.


ஏற்கெனவே கொழும்பில் 2004ஆம் ஆண்டு ஸாருக்கான் கலந்து கொண்ட ஒரு விழாவில் குண்டு வீசப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இது தவிர ஹிந்தியின் முன்னணி நட்சத்தரங்களான கரீனா கபூர், டீபிகா படுகோன், ரன்விர்கபூர், இம்ரான் கான், அமீர் கான், ராணி முகர்ஜி, கஜோல் போன்ற எவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.


தமிழில் கமல்ஹாசன், ரஜனிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களும் மணிரத்னம் போன்ற நெறியாளர்களும் முன்னரேயே விழா அழைப்பை நிராகரித்து விட்டிருந்தார்கள்.


தமிழ் திரைப்பட நடிகையான நமீதா தான் இந்த விழா அழைப்பைத் திருப்பி அனுப்பி விட்டதாகத் தெரிவித்ததோடு, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தமிழ் மக்களுடைய கோரிக்கைக்கு எதிராக தான் ஒரு போதும் செயற்படப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு மொத்த்தில் முன்னணி நடிக நடிகையர் அனைவருமே புறக்கணிக்க இரண்டாம் தர நடிகர்களை வைத்தே விழாவை ஒப்பேற்ற வேண்டியதாகி விட்டது.
அதுவும் பல்வேறு காரணங்களால் இந்திய அரசின் நெருக்குதல்களுக்குப் பணிந்து போகக் கூடிய் பலகீனமான நிலையிலிருந்தவர்களையே இந்திய அரசு கழுத்தில் பிடித்துத் தள்ளி விட்டிருக்கிறது.


அப்படி வந்த ஒருவர் ஹிருத்திக் ரோஸன். விளைவாக தென்னகத்தில் திரையிடப்பட்டிருந்த அவருடைய கைற்ஸ் என்ற திரைப்படம் திரையிடப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.


ஆக, மொத்தத்தில் இந்த திரைப்படவிழா ஒழுங்கமைப்பினால் இலங்கை அரசு தானே தனது முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.


இதேவேளை இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்தியத்திரைப்பட விருது வழங்கும் விழாவைப் புறக்கணிப்பதற்கான போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்களில் ஒருவரான தென்னிந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த சீமான் என்.டி.ரிவிக்கு வழங்கிய நேர்காணலில் இப்படிச் சொல்கிறார். "எந்தவொரு சர்வதேச ஊடகமும் போய் முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவும் தயாரில்லை. அங்கிருந்த அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறியவும் முயலவில்லை. அவர்கள் வாழ அங்கு வழி இருக்கிறதா? அவர்களை அங்கு கொண்டு போய் வேறு சிறிய சிறிய முகாம்களுக்குள் தான் வைத்திருக்கிறார்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. அதிபர் தேர்தலும் முடிந்து விட்டது. பாராளுமன்றத் தேர்தலும் முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டு தமிழர்களுக்கான சுதந்திரத்தை அளிப்பேன் என்று சொன்ன ராஜபக்சவிடம் என்ன சுதந்திரத்தை அழித்தீர்கள் என்று கேட்கவும் யாருமில்லை. தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு எங்கே சமவுரிமை எங்கே என்று கேட்கவும் ஆளில்லை" என்கிறார்.


எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஸி சேனநாயக்காவோ மணமகன் இல்லாத திருமண வீடாக இருக்கிறது இந்த விழா என்று வர்ணித்ததோடு விட்டு விடவில்லை.


மேலும் சில விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்றார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டில்களில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர். உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான வாழ்வு வாழ்கின்றனர்.


மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை அரசாங்கம் முன்வைக்கவில்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்று எச்சரித்துமிருக்கிறார்.


தமிழ் மக்களை மீளக்குடியேற்றி அம் மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் அபகீர்த்திக்கு ஆளாகுவதிலிருந்து மீள முடியாது. இதனை சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் அழுத்திக் கூறியிருக்கிறார்.


இலங்கை அரசாங்கம் இந்த விழாவை ஒழுங்கு செய்த நோக்கம் தலைகீழாகி விட்டது.


முதலாவது, இதுவரை நடந்த 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாக்களில் சோபையிழந்த ஒரு விழாவாகவும், பெருமளவு நட்சத்திரங்கள் பகிஸ்கரித்த ஒரு விழாவாகவும், அரசியல் சர்ச்சைக்குள்ளான ஒரு விழாவாகவும் இது நடந்து முடிந்திருக்கிறது.


இரண்டாவது, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை இவ்வாறான களியாட்டங்களுள் மூழ்கடித்துவிட நினைத்த அரசாங்கத்தினது நோக்கங்களுக்கு மாறாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்ற குரல் தான் இந்த விழாச் சர்ச்சைகளூடு ஓங்கி ஒலித்திருக்கிறது.


இலங்கை அரசாங்கமும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசாங்கமும் முதன் முறையாக ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறன.


இது எதிர்வரப் போகின்ற பல தோல்விகளின் ஆரம்பமா?


Monday, June 7, 2010

தனி ஈழமே தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு : லீ க்வான் யு


இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது. தனி ஈழம் ஒன்றே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறியுள்ளார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான் லீ க்வான் யு.

சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் லீ க்வான் யுவும் ஒருவர். இவரது மகன்தான் தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர். மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, எந்த இயற்கை வளமும், குடிநீர் வசதியும் கூட இல்லாமல் தவித்த சிங்கப்பூரை பெரும் வர்த்தக மையமாக மாற்றியவர். வல்லரசுகளுக்கு இணையாக உருவாக்கியவர் என புகழப்படுபவர்.

இன்றும் சிங்கப்பூர் அரசில், அமைச்சர்களின் வழிகாட்டி (Ministers Mentor) என மூத்த அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார் லீ.

லீ குவான் யுடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் சமீபத்தில் ‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’ என்றக நூல் வடிவில் வெளியாகியுள்ளது.

அந்த நூலில் இலங்கை இனப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் லீ குவான் யு விரிவாக விளக்கியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து அவர் இப்படி கூறியுள்ளார்:

இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.

ஆனால் தொடர்ச்சியான சிங்களர் மேலாதிக்கம் இரு இனங்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்திவிட்டது. தமிழரின் உரிமைகளை தெரிந்தே மறுக்கிறது சிங்களம். அரசியல் அதிகாரத்துக்காக சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி வருகிறார்கள் சிங்கள அரசியல்வாதிகள்.

இலங்கை மகிழ்ச்சியான நாடாக இனியும் இருக்க முடியாது. தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இனி உருவாகவும் முடியாது.

இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்.

இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள், சிங்களர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து போராடுவார்கள். சர்வதேசம் இதனை மெதுவாகப் புரிந்து கொண்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. அவரைத் திருத்தவே முடியாது” என்று கூறியுள்ளார்.

தமிழருக்குதான் அதிக மரியாதை தர வேண்டும்!

அவரிடம் இந்த நூலின் ஆசிரியர் டாம் பிளேட் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. மெஜாரிட்டியான சிங்களர்கள், விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர். உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை. யாழ்ப்பாணம் தமிழர்களை அவர்களால் நிச்சயம்வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முயலுகிறார்கள்.

முன்பும் இப்படித்தான்செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முயலுகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன்.

இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்பத்தான் சிங்கள அரசு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை, சிங்களர்களை விட தமிழர்களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான்.

மலேசியா, சிங்கப்பூரில் போய்ப் பார்த்தால் மலாய் இனத்தவரை விட சீனர்களும், தமிழர்கள் உள்ளிட்டோரும்தான் கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல இஸ்ரேலியர்களும், ஜப்பானியர்களும் மிகக் கடுமையான உழைப்பாளிகள். எதிர்கால உலகம் சீனர்கள் மற்றும் ஆசியர்களிடம்தான் இருக்கப் போகிறது,” என்று கூறியுள்ளார் லீ.

இந்த நூலை முன்னணி பத்திரிக்கையாளரும், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவருமான பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு எழுதியுள்ளார். இதை வெளியிட்ட நிறுவனம் டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழவே முடியாது, தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் இலங்கையில் அமைதி திரும்பும் என்பதை தனது கருத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக லீ வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீ க்வான் யு பற்றி…

1923-ல் பிறந்த லீ க்வான் யுவுக்கு இப்போது 86 வயது. 1959-ல் சிங்கப்பூரின் பிரதமரானார். 1990-ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமாராக இருந்தவர். உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1990 நவம்பரில், தானே முன்வந்து பதவி விலகினார். ஆனால் அவரது நிர்வாகத் திறன் சிங்கப்பூருக்கு முழுவதுமாக பயன்பட வேண்டும் என்பதற்காக 1990-ம் ஆண்டு மூத்த அமைச்சர் என்ற பதவியை உருவாக்கினர். அவரை வழிகாட்டியாகக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார் புதிய பிரதமர் கோ சோ டோங்.

2004-ம் ஆண்டு லீயின் மூத்த மகன் லீ ஸெய்ன் லூங் சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமைச்சர் வழிகாட்டி என்ற புதி்ய அமைச்சு உருவாக்கப்பட்டு அதில் லீ க்வான் யு அமர வைக்கப்பட்டார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அமைச்சகம் இது. லீயின் வழிகாட்டுதல்களுடன் அமைச்சரவையை நடத்த உருவாக்கப்பட்டது இந்தப் பதவி. ஆக 1959லி-ருந்து பதவிகளின் பெயர் மாறினாலும், சிங்கப்பூர் அரசின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் லீ.

உலகில் தனக்கு மிகப் பிடித்த அரசியல் தலைவர் மற்றும் நிர்வாகி லீ க்வான் யுதான் என பல முறை தனது பேட்டிகளில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்....

:

mahinda's interview..